கருப்பு பூஞ்சை தொற்று யாருக்கு, எப்படி ஏற்படுகிறது?- டாக்டர் அறிவுரை

0
925

மதுரையில் கொரோனோ நோய்த்தொற்று காரணமாக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் ‘மியூக்கோர்மைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனோ நோய்க்கு அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது. கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோய் உள்ளோரை கருப்பு பூஞ்சை தாக்கும். இந்த பாதிப்பு அமைதியாக உயிரை பறிக்க கூடியது என்ற தகவலை டாக்டர்கள் வெளியிட்டு உள்ளனர்.

தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறி ஆகும்.

குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கருப்பு பூஞ்சை தொற்று யாருக்கு, எப்படி ஏற்படுகிறது? அதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து மதுரை கண் மருத்துவமனையின் கண் சீரமைப்பு, கண் புற்றுநோய் துறைத் தலைவர் கூறியதாவது:-

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவில் இருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகள் நோயில் இருந்து மீண்டு வர உதவும். அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போதும், பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிறகும் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

கருப்பு பூஞ்சைத் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிறப்பு மருத்துவரை அணுகினால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். காது, தொண்டை, கழுத்து சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்களால் இந்த நோயை குணப்படுத்த முடியும்.

உடலில் ரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். டாக்டர்களின் அறிவுரையின்றி எந்த மருந்தையும் நிறுத்தக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள், கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள எப்போதும் முக கவசம் அணியவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும், அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று தெரிவித்தார்.