கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் – தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு

0
453

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது.

இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:-

ஹலோ லாரன்ஸ் நல்லா இருங்கீங்களா,

தொண்டர்: நல்லா இருக்கோம்மா… உங்க குரல கேட்கவே சந்தோஷமாக இருக்குமா…

சசிகலா: வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா

தொண்டர்: எல்லோரும் நல்லா இருக்கோம்மா,

சசிகலா:- சரி சரி… ஒன்னும் கவலைப்படாதீங்க… கண்டிப்பா கட்சியை சரி பண்ணிறலாம். எல்லோரும் தைரியமாக இருங்க… இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன். கவலைப்படாதீங்க

தொண்டர்: உங்க பின்னாலே தான் நாங்க இருப்போம்.

சசிகலா: சரி சரி….கொரோனா நேரம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க, நிலைமை மோசமாக இருக்கு. நிச்சயம் வந்திருவேன்…

இவ்வாறு அந்த உரையாடல் முடிவடைகிறது.

அவர் பேசியதாக வெளியான இந்த ஆடியோ தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வருவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.