இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி..

0
305

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தும், இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து அரசடி சந்தி வரையில் கண்டன ஊர்வலம் நடைபெற்று மீண்டும் பேரணி நடைபெற்று மீண்டும் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் வரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கல்வியை இராணுவ மயப்படுத்தும் கொத்தலாவ சட்டத்தினை முறியடிப்போம், கொத்தலாவ பாதுகாப்பு சட்ட மூலத்தினை அமுல்படுத்தாதே, கல்வியை இராணுவ மயப்படுத்தாதே, இராணுவ-சந்தை கல்வியை நிறுத்து போன்ற கோசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், சர்வமத ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.